இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

முத்தம்
















முத்தம்
பாசத்தின் பரிமாற்றம்
உணர்ச்சியின் உச்சகட்டம்

இதோ நான்
உண்ட முத்தமும்
கண்ட முத்தமும்

அவையோ
கட்டில் முத்தமில்லை
தொட்டில் முத்தமில்லை

கண் விழித்த அடுத்த நொடியில்
பூமிக் காதலிக்கு
சூரியக் காதலனின்
சூடான காலை முத்தம்

தன் முத்தத்தை
பூமியில் பதிக்க-நெடுந்தூரம்
பயணப்பட்டு வரும்
மழைத்துளிகள்

தேன் சுரக்கும் பூச்செண்டுகள்
தேடி வந்து முத்தமிடும் வண்டுகள்

அத்திப்பழ உதடுகளை
உண்ண
ஊரே சுற்றிவரும்
பறவைகள்

உணவு ஊட்டும் சாக்கில்
தன் குஞ்சுகளுக்கு
முத்தமிடும் காக்கைகள்

தாய்ப்பால் ஊட்டும்
தாயின் மார்புக்கு
பச்சிளம் குழந்தையின்
பசி முத்தம்

முந்தானையை உருட்டி
கண் தூசியை எடுக்க
சூடு ஊடுருவ
சூடான ஒரு முத்தம்

குண்டு சோடா
குடிக்கும் போது-அக்
குமரிப் பொட்டிலுக்கு
குட்டி முத்தம்

ஆசைத் தீயில் சிக்கி
அழிந்துவிடும் புகைச்சுருட்டுக்கு
காட்டமான முத்தம்

நகத்தை
காயப்படுத்தும் முன்னால்
விரலுக்கு
மயக்க மருந்து போன்ற
மன்மத முத்தம்

கண்கள் நிறைய இருந்தும்
உள்ளே விழி இல்லாததை மறந்து
உதட்டு முத்தம் பதித்து
ஊதி தூசி எடுக்கும்
ஊதாரி செவிடன்
வேதனையில் அழும்
குருட்டு புல்லாங்குழல்

எழுதுகோல் காகிதத்திற்கு
உடலெங்கும் அளிக்கும்
ஊடல் பொழுதின்
உச்சகட்ட முத்தம்
கடைசியில்
காகிதத்தை ஈரப்படுத்தும்
எச்சில் மை

சேமியா குளிர் இனிப்புக்குச்சிக்கு
சேர்த்து வைத்து கொடுக்கும்
முத்தம்
அதன் இதழ் சாயம்
உதட்டில் இதமாக பாயும்

உதட்டில் யாசிக்கும்
உணர்ச்சிகளில்
உருகாமலும்
உடையாமலும்
பயத்தில் கொடுக்கும் முத்தம்
பலூனுக்கு