கண்மூடித் தூங்கும் போதும்
கனவில் நீ வந்தால் போதும்
உன்னைக் கேலி செய்யும் போதும்
சிலுத்துக் கொண்டு போனால் போதும்
ஓராயிரம் முறை தவிக்கும் போதும்
ஒருமுறை உனை பார்த்தால் போதும்
பயத்தில் நீ கத்தும் போதும்
பக்கத்தில் நான் இருந்தால் போதும்
பயணத்திற்கு நான் செல்லும் போதும்
பாதி முத்தம் கிடைத்தால் போதும்
உண்ட மயக்கம் வந்தால் போதும்
உனதுமடி கொஞ்சம் கிடைத்தால் போதும்
குளித்துவிட்டு நீ வந்தால் போதும்
துடைக்க துண்டாய் நான் இருந்தால் போதும்
மூக்கு அடைத்து கொண்ட போதும்
முந்தானை வாசனை நுகர்ந்தால் போதும்
மனது மாறி செல்லும் போதும்
மாமா என்று அழைத்தால் போதும்
ரசிக்க ஒன்றை தேடும் போதும்
என்னைப் பார்த்து சிரித்தால் போதும்
கற்பனை கொஞ்சம் வடியும் போதும்
காகிதம் கையில் கிடைத்தால் போதும்
உன்னோடு ஒன்றாக நடக்கும் போதும்
உன் கைவிரல் ஒன்று இணைந்தால் போதும்
ஆயிரம் கவிதைகள் இருந்த போதும்
உனது கவிதைகள் இரண்டையும் தந்தால் போதும்
காணி நிலம் இருந்த போதும்
கால்தடம் பட்ட மண்துகள் போதும்
காலம் முடிந்து இறக்கும் போதும்
கண்ணீர் இருதுளி கிடைத்தால் போதும்
