சுட்டு வைத்த
இட்லி போன்ற நிலவு
அதனை பதினைந்து நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
பிச்சுத் தின்பது யார்?
மரங்களுடன்
கள்ளத்தனம் செய்யும் தென்றலை
கைபிடித்துப் புயலாக
அழைத்துச் செல்வது யார்?
நதியின் மணற்பரப்பில்
உறங்க துடிக்கும் வெள்ளத்தை
கடலுக்குள் இருந்து
கயிறு கட்டி இழுப்பது யார்?
சுதந்திரமாக உலாவும்
மேகங்களை
கன்னத்தை கருக வைத்து
கண்ணீர் விடச் செய்வது யார்?
தனது பணியை முடித்து
சூரியன் விடை கொண்டதும்
விண்ணிலிருந்து
விண்மீன் தீபங்களை
ஏற்றுவது யார்?
கடலின் மேற்பரப்பில்
தண்ணீர் எனும் போர்வையை
காய வைக்க
காற்றில் படர
உலர்த்துவது யார்?
ஆழக் கிணற்றுக்குள்
பாறைக்குள் ஒழிந்து கொண்டு
நிறுந்தாமல் சிறுநீர்
கழிப்பது யார்?
மாலை நேரத்தில்
சூரியன் மறைந்த தைரியத்தில்
வானத்தின் மேல் கூசாமல்
வெற்றிலை போட்டு
எச்சில் துப்புவது யார்?
மேக வாகனங்களை
வேகமாக ஓட்டிச் சென்று
விபத்துக்கு
உள்ளாக்குவது யார்?
இதை எல்லாம் செய்வது
யார்...? யார்..?
ஆத்திகன் கடவுள் என்பான்
நாத்திகன் இயற்கை என்பான்