இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

வரலாறு படிக்காதே


















சீர்திருத்த கல்வி என்றார்கள் 
யார் யாரோ மோதி கொண்டார்கள்
யார் யாரோ வழக்கு தொடுத்தார்கள்
நமது அரசியல்வாதிகளுக்கு 
தமிழை வளர்க்க இவ்வளவு ஆர்வமா?
என்று நினைத்தேன்.

சீர்திருத்த கல்வி புத்தகம் 
என் கண்ணில் பட்டது
நாம் படித்தது இந்த புத்தகத்தில் இருக்குமா?
படித்தது இன்னும் ஞாபகம் இருக்குமா?
பழைய நினைவுகளை தேடியும் 
எனது ஞாபக திறனை பரிசோதனை செய்யவும்
என்னை பார்த்து சிரித்த அந்த 
சமூக அறிவியல் புத்தகத்தை எடுத்தேன்
அதில் வரலாற்று பகுதியின் பக்கங்களை
அலுங்காமல் புரட்டினேன்.

தூக்கி வாரிப் போட்டது
ராச ராச சோழனை காணவில்லை 
வீர பாண்டியனை காணவில்லை 
செங்குட்டுவ சேரனை காணவில்லை 
ஆமாம்,
சேர,சோழ,பாண்டியர்களை 
காண முடியவில்லை 
மாறாக எல்லாம் ஐரோப்பிய வரலாறுகள்

தமிழ் நாட்டு தமிழனே!
தயவு செய்து உமது வரலாற்றை படிக்காதே
நீ இப்போது இருக்கும் 
நிலையை கண்டு வெட்கி தலைகுனிவாய்
உனது பழைய பெருமைகளை 
அறிந்து கொண்டு விடுவாய் 
உமது வரலாற்றை முழுவதும் தெரிந்தால் 
ஒருமைபாட்டுக்கு பங்கம் விளைவித்து விடுவாய் 
ஆதலால் தமிழ்நாட்டு தமிழனே
உமது வரலாற்றை நீ படிக்காதே..