இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

இலட்சியக் கோரிக்கை















அனலைக் கக்குகிறது
இனவாத நெருப்பு
வியர்த்துக் கொட்டுகிறது
விடுதலைக்கு ஏங்கும் உடல்

விடுதலைத் தென்றல்
வீசும்போதே இலட்சிய உடல்
வியர்வை யடங்கும்-இல்லையேல்
வித்துடலாகிப் போகும்

கடலலை வீச-மூடன்
தடையுத்தரவு பிறப்பிக்கிறான்
எங்கள் விடுதலைச் சூரியன்
உதிப்பதை தடுப்பதாய் நினைத்து
மேகங்களை ஏவிவிடுகிறான்

பசிதான் -அட
பல ஆண்டுப் பசிதான்
அதற்காய்
எதிரி விட்டெறிந்த
எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு
பசியாற நினைப்போமா?-அட
மாவீரர்களின் இலட்சியக் கனவை
மண்ணோடு புதைப்போமா?

காட்டை யழித்தான்
கஞ்சிக் களைய முடைத்தான்
எங்கள் வீட்டை யுடைத்தான்
நாளை நாட்டை யுடைப்போம்
தரணியில் தமிழனுக்கென்று
தனிநாடு படைப்போம்
தமிழீழம் அமைப்போம்

அட போட்டு அழித்துவிட்டுப் போக
இது கோலமல்லடா
கோரிக்கை ... இலட்சியக் கோரிக்கை
தமிழர்களின் தணியாத கோரிக்கை